அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 15 மார்ச், 2011

வாக்களிக்காத பெருமக்களே...!


இன்னும் சில நாள்களில் வீதிகளில் "வாக்காளப் பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை, முத்தான வாக்குகளை எங்கள் சின்னத்துக்குச் சிந்தாமல், சிதறாமல் வாக்களியுங்கள்' எனக் கட்சிகள் பலவும் போட்டி போட்டுப் பிரசாரம் செய்யவுள்ளன.என்னதான் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கண்காணித்தாலும், அவற்றையெல்லாம் மீறி, வறுமையில் வாடுவோரையும், அத்தனைக்கும் ஆசைப்படுவோரையும் நாடிப் பரிசுப் பொருள்கள், ரூபாய் நோட்டுகள் வந்துசேரும் காலமிது.கனவிலும் கண்டிராத வாக்குறுதிகளோடு, முன்பின் தெரியாதவர்கள், அண்ணன், தம்பி, அக்கா, அம்மா, அண்ணி, மாமா என உறவுமுறைகளைக் கூறி ஓட்டு வேட்டை நடத்தும் நேரமிது.இன்றைக்கு அரசியல் பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளதை மறுக்க முடியாது.தேநீர் கடையானாலும், முடிதிருத்தும் நிலையம் ஆனாலும், 4 பேர் உட்கார்ந்து பேசுகிறார்கள் என்றால் அது நிச்சயம் இன்றைய அரசியல்தான் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.அரசியலைப் பற்றி அலசும் இன்றைய நடுத்தர, ஏழை சமுதாயத்தினர் பெரும்பாலோர், அந்த அரசியலால் லாபம் அடையாதவர்கள்தான்.குறிப்பிட்ட கட்சியின் மீதான அபிமானம் அல்லது வெறுப்பு, அரசு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் சந்திக்கும் இடர்ப்பாடுகள் இன்றைக்கு எல்லோரையும் அரசியல் பேச வைத்துவிட்டது.இதற்கெல்லாம் அசராதவர்கள் ஒருதரப்பு உண்டு. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று வேதாந்தம் பேசும் வகையைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.அத்தகையோரில் பெரும்பாலோர் படித்தவர்களாகவும், நேர்மையை விரும்பக் கூடியவர்களாகவும் இருப்பதுதான் வேடிக்கை. அரசியல் விவகாரங்களை அக்கு வேறு, ஆணி வேறாகப் பேசும் இவர்கள், நாமஓட்டு போட்டுத்தானா அவர்(அவர் நினைக்கும் நல்லவர்) ஜெயிக்கப் போகிறார்? என்ற போக்கில் பேசாமல் இருந்துவிடுவது வாடிக்கை. தேர்தல் முடிவுகள் இவரது எண்ணம்போல் அமையாவிட்டாலோ, "இந்த நாடு உருப்படாது. மீண்டும் வெள்ளைக்காரன் வந்தால்தான் உருப்படும்' என்று பேசத் தொடங்கி விடுவார்கள்.இன்றைக்கு அரசியலில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவோரும், கோடிக்கணக்கில் சொத்துக் குவிப்பதற்காக அரசியலில் தஞ்சம் அடைவோரும் மக்கள் பிரதிநிதிகளாகஉலா வருவதற்கு, வேதாந்தம் பேசிவிட்டு வாக்களிக்காமல் இருப்பவர்களும் காரணமாகி விடுகின்றனர்.1951-ல் தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் வாக்களிக்காதவர்களின் சதவீதம் 45.25. அடுத்த தேர்தலில் அது 53.44 சதவீதமாக உயர்ந்தது.பிறகு ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு வாக்களிக்காதவர்களின் சதவீதத்தைக் குறைத்து வந்தாலும், அது போதுமானதாக இல்லை. இதனால் 2006 தேர்தலில்கூட வாக்காளிக்காதவர் சதவீதம் 29.18-ஆக இருந்தது.இடப்பெயர்ச்சி, உடல் நலக்குறைவு, தவிர்க்க முடியாத சூழல் போன்றவற்றால் வாக்களிக்காதவர்கள் எண்ணிக்கையில் மிகச்சொற்ப அளவே இருப்பர். மற்றவர்கள் பெரும்பாலும் பேச்சுடன் நிறுத்திக்கொண்டு, செயலில் இறங்காதவர்களாகவே இருப்பர்.ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும், வாக்கு அளிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட, குறைந்த வாக்கு எண்ணிக்கையில்தான் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை வாக்களிக்கத் தவறுவோர் ஏனோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.இவர்களுக்கு, நம்முடைய ஒரு வாக்குக்கூட, நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க உதவும் என்ற மனப்போக்கு என்றைக்கு உதிக்கிறதோ, அப்போதுதான், ஓரளவு நேர்மையாளர்களை மக்கள் பிரதிநிதிகளாக சட்டப் பேரவைக்கோ, மக்களவைக்கோ அனுப்ப முடியும்.அதுவரை பணம், பரிசுப்பொருள், லாபக் கணக்கு போடும் கூட்டணிகள், இனம், ஜாதியை வைத்து அரசியல் நடத்துவோர், கவர்ச்சி அரசியல் நடத்துவோர் கையில்தான் ஜனநாயகம் சிக்கித் தவிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக