அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 21 ஜூலை, 2011

காச நோய் போதை பொருள் விழிப்புணர்வு முகாம்












கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் - மக்கள் மையம்




கந்து வட்டி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், திருட்டு வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் ஆந்திர மாநிலத்துக்குத் தப்பிச்சென்றுவிட்டனர்; மக்கள் நிம்மதியாக வாழலாம் என்றார். வெளி மாநிலங்களுக்குத் தப்பிச் சென்றவர்களின் பட்டியலில் கந்துவட்டி தாதாக்களும் உள்ளனர். கந்து வட்டிக் கும்பல்களால் கொலைகள் மட்டுமன்றி தற்கொலைகளும் அதிகமாக நடைபெற்று வருகின்றன என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்பியபோது, சட்டப்பேரவையில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுக்கும் என்றார். இதன்பிறகுதான் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்துவட்டி கும்பலால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணுக்குப் பாதுகாப்புக் கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டார். நடிகை சுலக்சனா கந்து வட்டிக்கும்பல் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் செல்லப்பாண்டியன் கந்து வட்டிக் கும்பலின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் பேசியதற்குப் பின் நடைபெற்ற சம்பவங்கள் இவை. இதுபோன்று ஏராளமான குற்றச்சம்பவங்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டிக்கடைகள் உள்ளன. தினவட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரன்முறை இல்லா வட்டி, ரன் வட்டி என பல பெயர்களில் கந்துவட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கந்து வட்டிக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் என அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. அன்றாடக்கூலிகளான நெசவாளர்களைக் குறிவைத்து இறங்கிய கந்து வட்டிக்கும்பலிடம் 2 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி அந்தப் பாக்கியை வாராவாரம் செலுத்தி வந்த பெண்ணின் மகள், பணம் கொடுக்கச் சென்றபோதுதான் அக்கும்பலின் தூண்டுதலால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அதைச் செல்போன் மூலம் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டனர். எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுக்குப்புத்தி உள்ளவர்களின் தொழில் பெரும்பாலும், கந்துவட்டியாகத்தான் இருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்து வட்டியால், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நபர்கள், குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். சிறுதொழில்களில் தொடங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீட்டை வேறுபாதைக்கும் திருப்பிவிடுகின்றனர். ஆனாலும், அங்கும் இருப்பது கந்துவட்டிதான். தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பற்றி, வரைவுச்சட்டம் ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன்படி, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்துக் கடன் பெற்றால், ஆண்டுக்கு 9 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம். சொத்துப்பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சத வட்டி வசூலித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாபம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும்போது, இந்த தில்லு முல்லு வெளியாகி வழக்குப்பதிவு வரை செல்கிறது எனவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும் எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறுவாராயின் அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2001-2006-ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.இதன்பிறகே கந்துவட்டிக் கொடுமை குறைந்தது. கிராமங்களில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கடன் வாங்கியவர்களை எழுப்பும் கந்து வட்டிக் கும்பலின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டப்பட்டது. கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திவந்த ஏழை மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறு தொழில் கடன் வழங்கப்பட்டது. இதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக அரசு கொண்டுவந்த கந்துவட்டித் தடைச் சட்டத்தையும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தையும் கிடப்பில்போட்டது. இதனால் அப்போது ஆளும் கட்சியின் ஆதரவுடனயே கந்து வட்டித் தொழில் உச்சத்தை அடைந்தது. இப்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன், கந்துவட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும், தங்கள் தொழிலுக்கு அடிப்படையாக உள்ள ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டனர். கடந்த 1 மாத காலத்தில் கந்துவட்டி குறித்து குறிப்பிடும்படி எங்கும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.ஊடகங்களிலும் இதுகுறித்த எந்தச் செய்தியும் இல்லை. இதனால் திருட்டு பயம் நீங்கியுள்ளதோடு, கந்துவட்டிக் கொடுமைக்காரர்களிடம் சிக்கித்தவித்த ஏழை மக்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துள்ளது. 


 கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்

நீரின்றி அமையாது இவ்வுலகம் என்று கூறியது நாம் மதிக்க மறந்துவிட்ட மாபெரும் உண்மையை உணர்த்தவேயாகும். நீர் தண்ணீராக இருந்தால் மட்டும் போதாது, நன்னீராகவும் இருக்க வேண்டும்.இப்பூவுலகின் பரப்பிலே படிந்துள்ள தண்ணீரின் மொத்த அளவில் 97.51 சதவிகிதம் கடல் நீராகும். மீதமுள்ள 3 சதவிகித நல்ல நீரில், 97 சதவிகிதம் வடதுருவம், தென் துருவப் பனிப்பாறைகளாகவும், 2 சதவிகிதம் நிலத்தடி நீராகவும் உள்ளது. மீதமுள்ள 1 சதவிகிதம் மட்டுமே குளம், குட்டைகள், ஏரிகள், ஆறுகள், அணைகள் அனைத்திலும் நிரம்பியுள்ள நீராகும். வருண பகவானின் கருணையால், பொய்க்காமல் பெய்தால்தான் இக்குறைந்த அளவு நீரும் முழுமையாகக் கிடைக்கும்.உலகம் வெப்பமாவதன் வெளிப்பாடாக, காலம் மற்றும் அளவு மாறிவரும் பருவமழையின் வருங்காலத் தாக்கங்களும், நீரின் கொள்ளளவைக் குறைக்க வாய்ப்புள்ளது. இந்த 1 சதவிகித தண்ணீரில், 52 சதவிகிதம் ஏரிகள் மற்றும் அணைகளிலும், 38 சதவிகிதம் மண்ணிலேயும், 8 சதவிகிதம் காற்றிலும் ஈரப்பதமாக உள்ளன. 1 சதவிகிதம் ஆறுகளிலும், 1 சதவிகிதம் உயிர்களின் உடலிலும் உள்ளன.எனவேதான், தண்ணீர் திரவத் தங்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள்தொகையும், அதிவேக நாகரிக வளர்ச்சியும், காசுநோயும் அன்றாட வாழ்வுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள தண்ணீரை வேகமாக மாசுபடுத்தி வருகிறது. இது நாம் கண்கூடாகக் காணும் உண்மை.இதன் விளைவு, ஐக்கிய நாடுகள் சபையின் "மக்களுக்குத் தண்ணீர், வாழ்வுக்குத் தண்ணீர்' என்ற உலக நீர் மேலாண்மை பற்றிய ஆய்வறிக்கையில் மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியா உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.உலகத்தில் மற்றைய நாடுகளை ஒப்பிடுகையில், ஆசியாவில் உள்ள நதிகள் மிக அசுத்தமானதாகவும், நீரில் மூன்று மடங்கு அதிக அளவில் மனித மலத்தில் உள்ள பாக்டீரியா கலந்துள்ளது என்பதும், இருபது மடங்கு அதிக அளவு ஈயம் கரைந்துள்ளது என்ற விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.இருபதாம் நூற்றாண்டில், உலகில் மக்கள்தொகை மூன்று மடங்காக அதிகரிக்கும்போது, நீரின் பயன்பாடு ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.இந்த நூற்றாண்டின் சரி பகுதி கால அளவில், 60 நாடுகளில் உள்ள 700 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாமென்ற கணிப்பும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.எனவே, ஒவ்வொரு சொட்டு நீரையும், ஒவ்வொரு பருக்கு மண்ணையும், ஒவ்வொரு சூரியக் கதிரையும் ஒன்றிணைத்துச் சீரிய முறையில் செம்மையாகப் பயன்படுத்தினால்தான், நமது நாட்டின் வருங்காலச் சந்ததிகளுக்கு நலமான, வளமான, மகிழ்வான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் அந்தப் புனிதச் செயலை நிகழ்த்த இயலும்.மனித வாழ்வுக்கு இன்றியமையாத குடிநீர், தமிழகத்தில் எந்த அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் கீழ்க்கண்ட விவரங்கள் வெளிக்கொணர்கின்றன.தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டில், அரசு நீர் பரிசோதனை ஆய்வாளர்களால், எவ்வளவு சதவிகிதம் குடிநீர், குடிக்கவே லாயக்கற்றது என்று கண்டுபிடிக்கப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: மனித மலத்தில் உள்ள எஸ்கர்கியா கோலை என்ற பாக்டீரியா, அவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் ஜியார்டியா, அமீபா போன்ற கிருமிகளும் கலந்துள்ள உண்மைகளும் தெரிய வருகிறது.குடிநீராக, நகர்ப்புறங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் மாநகராட்சிகளில் 6 சதவிகிதம், அரசு நிறுவனங்களில் 17 சதவிகிதம், நகராட்சிகளில் 26 சதவிகிதம், நகரப் பஞ்சாயத்துகளில் 31 சதவிகிதம், அரசு மருத்துவமனைகளில் 48 சதவிகிதம், ரயில் நிலையங்களில் 66 சதவிகிதம் குடிக்கவே லாயக்கற்றது - மோசம் என்ற முத்திரையைப் பெற்றுள்ளது வருந்த வேண்டிய விவரங்களாகும்.கிராமப்புறங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரிலும், 63.79 சதவிகிதம், குடிக்க லாயக்கற்றது என்ற வேதனையை, பரிசோதனைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.நகரங்களைவிட கிராமப் பகுதிகளில், நீரின் மாசு அதிகமாக உள்ளதையும், நகரப் பகுதிகளில், மாநகராட்சிகளில் குறைவாகவும், பிறகு படிப்படியாக நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் மக்கள் கூடும் பொதுஇடங்களான அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்களில் அதிகரித்து வருவதையும், அதன் காரணங்களையும் கவனமாகப் பரிசீலித்து, அக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.2009-ம் ஆண்டு மேற்கொண்ட குடிநீர் ஆய்விலும், இதேபோன்ற குறைகள், கிட்டத்தட்ட இதே விகிதாசாரத்தில் உள்ளதையும், ஆய்வுப் புள்ளிவிவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.இதுபோன்ற மாசுபட்ட குடிநீரைக் குடிப்பதால் எவ்வகையில் மக்களின் உடல்நலம் பாதித்திருக்கும் என்ற உண்மையைத் தெரிந்துகொள்ளும் உந்துதலில், மாவட்ட வாரியாக, ஆண்டு முழுவதும், தண்ணீர் மூலம் பரவும் நோய்களான வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, சுகாதார மையங்கள், மருத்துவமனைகளின் பதிவுகளின் மூலம் கண்டறியப்பட்டது. மாவட்ட வாரியான நோய்ப் பட்டியலில் அதிகமாக 2006 முதல் 2009 வரையான நான்கு ஆண்டுகளில், கடலூரில் 8,000 பேரும், மதுரையில் 7,153 பேரும், திருவள்ளூரில் 6,126 பேரும் நீரில் பரவும் நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையை நாடியது தெரிய வந்துள்ளது.தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் சேர்த்து நான்கு ஆண்டின் சராசரியாக 62,886 நபர்கள் இவ்வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதங்களில், மே, ஜூன், ஜூலையில்தான் மிக அதிகமான நோய்த்தாக்கமாக, சராசரி மாதம் 5,000 என்பதும், 2009-ம் ஆண்டு மிக அதிகமாக 88,746 நபர்கள் பாதிப்புக்குள்ளானதும் தெரிகிறது.கோடைக்காலத்தில் நீர் அளவு வெகுவாகக் குறைவதால், கிருமிகளின் தாக்கம் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த, அந்த மாதங்களில் சிறப்புத் தணிக்கைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.குடிநீரில், சாக்கடை நீர் கலப்பதைச் சுலபமான முறையில் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சாக்கடைகள், வீதிகளின் அகல விளிம்புகளில் நீளவாக்கில் அமைந்துள்ளன. வீட்டுக்கு விநியோகிக்கும் குடிநீர்க் குழாய்களோ, சாக்கடையைத் தாண்டி, எதிர்ப்புறத்தில் உள்ளே செல்கின்றன.இந்தச் சந்திப்புகளில், குழாய்களில் விரிசல், கசிவு காரணமாக சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளது. குடிநீரும், வடிகாலும் ஒன்றாகிவிடும். இதைக் கண்டறிய, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடிநீர்க் குழாய்களில் நீரைக் கீழ்க்கண்டவாறு சோதிக்கலாம்.ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் நுண்ணுயிர் வளர்ச்சி ஊக்க திரவத்தில் உறிஞ்சு காகிதத்தை நனைத்து, உலர்த்தி, சுருட்டி, சிறிய 80 மில்லி மீட்டர் அளவேயுள்ள கண்ணாடிக் குப்பியில் அடைத்து, அதில் வீட்டில் உள்ள குடிநீர்க் குழாய்களிலிருந்து சேகரிக்கப்படும் நீரை ஊற்றி மூடி வைத்தால், 24 மணி நேரத்தில், கிருமிகள் உள்ள தண்ணீர் கரும் சிவப்பு நிறமாக மாறும்.மலத்தில் மட்டுமேயுள்ள எஸ்கர்கியா கோலை என்ற நோய் உண்டாக்கும் பாக்டீரியா உள்ளதை இது உறுதிசெய்யும். அந்தக் கிருமி நீரில் கலக்காவிட்டால், நிற மாறுதல் இருக்காது.இதனால் அவ்வாறு நிறம் மாறும் தண்ணீருடைய வீடுகளுக்கு நீர் விநியோகிக்கும் குழாய்களையும், சாக்கடைக் குழாய்களையும் மண்ணைத் தோண்டி பழுதுபார்க்க ஏதுவாகும். வீதியில் உள்ள அனைத்து வீடுளிலும் தண்ணீர் நிறம் மாறினால், வீதிகளுக்கு வழங்கும் முக்கிய குழாய் சந்திப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.ஹைட்ரஜன் சல்பைடு மூலம் பாக்டீரியா கண்டறியும் இந்த மிகமுக்கிய சோதனைக்கு ஆகும் செலவு ரூ.2 அல்லது 3 மட்டுமே என்பது மகிழ்வான செய்தி. மிக எளிதில் செய்யவல்ல இந்தத் திட்டத்தைச் சுலபமாகக் குறைந்த செலவில், மக்களது ஆதரவுடன் விரைவில் செயல்படுத்தினால், வரும் ஆண்டுகளில் நோய்களை வெகுவாகக் குறைக்கலாம்.குடிநீர்த் தேவை அன்றாடம் அதிகரித்து வருவதால், விலை நீராக அவை மாற்றப்பட்டு, இல்லாதவர்களுக்கு இல்லாததாக மறுக்கப்படுகிறது.உலகத்தில், எட்டு நபர்களில் ஒருவருக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீரைச் சுத்தப்படுத்தி, கிருமிகளைக் களைய, இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குளோரின் முறையுடன் யு.வி. (அல்ட்ரா வயலெட்) கதிர்களைப் பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் குடிநீர்க் கிருமிகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம். அல்ட்ரா வயலெட் கதிர்கள் கிருமிகளின் செல்களுக்குள் ஊடுருவிச் சென்று, டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. போன்ற மரபுக் காரணிகளைச் சிதைத்து, செயலிழக்கவைக்க வல்லவை. எனவே, இது குளோரினால் அழிக்க முடியாத கிருமிகளையும் சிதைத்துவிடும்.தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, வளரும் நாடுகளில் செலவு குறைவாகவும், எளிமையாகக் கையாளும் வகையிலும், எல்லோராலும் ஏற்கத்தக்க வகையிலும் உள்ள, சூரிய சக்தியால் இயங்கி, நாள் ஒன்றுக்கு 4,000 லிட்டர் தண்ணீரை அல்ட்ரா வயலெட் கதிர் மூலம் நன்நீராக்கும் புதிய கருவிகள் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளை பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டடங்களின் மேல் பொருத்திக் குறைந்த செலவில் இயக்கலாம்.அதுபோன்றே, "லைப் ஸ்டிரா' என்ற ஓர் அடி நீளமும். ஊதுகுழாய் பருமனுமே உள்ள கிருமி வடிகட்டி ஒன்று குறைந்த விலையில் (6 டாலர்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உறிஞ்சி நீர் குடித்தால், அசுத்த நீரில் உள்ள கிருமிகளை 99.9 சதவிகிதம் நீக்கும்.இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தவல்ல இக்கருவி, பள்ளிக் குழந்தைகளின் பயன்பாட்டுக்கு, வளரும் நாடுகளில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீரை நன்னீராக்கிக் கண்ணீரைத் துடைத்திடும் கருணைச் செயலை விரைவில் நிறைவேற்றத் தமிழக அரசு முனைந்திருப்பது ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்து, நலமும், வளமும், மகிழ்வும் தமிழக இல்லங்களில் பரிமளிக்கச் செய்ய வல்ல நல்ல நிகழ்வாகட்டும்! 

அன்புடன் 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் 
பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
பந்தலூர் 

இயற்கையைச் சீண்டினால் விபரீதம்தான்...

செயற்கையால் இயற்கையைக் கட்டுப்படுத்த முடியாது என்பது இயற்கை நியதி. அதை மீறினால் ஏதாவது விபரீதம் ஏற்படுவது நிச்சயம்.  கோவை மாவட்டம் பெரியநாயக்கம்பாளையம் வனச்சரகம் தடாகம் காப்புக் காட்டில் ஜூலை 9-ம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை "ரேடியோ காலர்' பொருத்தும்போது துடிதுடித்து இறந்துள்ளது.  இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்பட்டது.  யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்திவிட்டோம் என பெருமைகொண்டது வனத்துறை. ஆனால், அடுத்த 2 நாள்களுக்குள் வனத்துறையினர் சாயம் வெளுத்துவிட்டது.  "ரேடியோ காலர்' பொருத்தப்படுவது என்ற தகவல் கிடைத்த உடனேயே சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வனவிலங்கு நல அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியிருந்தால் யானை இறப்பதை முன்கூட்டியே தடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.  அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு கால்களில் "ரேடியோ காலர்' கருவி பொருத்தப்பட்டபோது உலகம் முழுவதும் இருந்து மனசாட்சியுள்ள பல மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன. யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்தப்படுகிறது அல்லது பொருத்தப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிந்ததும் மனசாட்சியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும்.  தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் ஆசியாவிலேயே அதிக யானைகள் உள்ளன. தோராயமாக 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்தப் பகுதியில் சுமார் 8,500 யானைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இங்குதான் மனித-யானை மோதல்களும் அதிக அளவு நடக்கின்றன. வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், யானைகளின் பாரம்பரியமான (பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான) வழித்தடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்ததுதான் பிரதான காரணம்.  தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், ஆன்மிகக் குடில்கள், பொறியியல் கல்லூரிகள் என்ற வகையில் அரசியல்வாதிகளின் உதவியுடன் செல்வாக்குமிக்க தனிநபர்கள் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் சில முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பிடியில் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.  யானைகள் ஒரே இடத்தில் வாழ்வதில்லை. அவை இனப்பெருக்கம் நடத்திக்கொண்டே, மேற்குத்தொடர்ச்சி மலையில் சுமார் 300 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்துக்குள் அங்கும், இங்கும் இடம்பெயர்ந்து கொண்டே வாழும். அதன் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அவை வழிமாறி சமவெளிக்கு வருகின்றன.  2011-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் யானைகள் சுமார் 700 முறை விவசாய நிலங்களுக்குள் சென்றுள்ளன. 2010-ம் ஆண்டில் 844 முறையும், 2009-ம் ஆண்டில் 560 முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.  பிரதான பிரச்னையான யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வழிதேடாமல், யானைக்கு "ரேடியோ காலர்' பொருத்துவது, தும்பைவிட்டுவிட்டு, வாலைப் பிடிப்பதற்குச் சமமான செயல்.  அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால்தான் யானை இறந்தது என்கிறது வனத்துறை. மயக்க மருந்து கொடுக்க அல்ல; முதலில் "ரேடியோ காலர்' பொருத்த உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?  அட்டவணைப் பட்டியலில் இருக்கும் விலங்குகளைக் காயப்படுத்தினாலோ அல்லது சாகடித்தாலோ, அதற்குக் காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்கிறது வனத்துறை.  "ரேடியோ காலர்' பொருத்தும் பணியின்போது யானை இறந்த சம்பவத்தைப் பார்க்கும்போது அது கொலை செய்யப்பட்டதற்குச் சமம் என்பது தெளிவாகிறது. அட்டவணைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் யானை கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு யார் பொறுப்பு?  இனிமேலாது இதுபோன்ற தவறுகளுக்கு இடமளிக்காமல் வனத்துறையினர் சுதாரித்துக்கொண்டு அறிவுப்பூர்வமாகச் செயல்படுவது அவசியம். யானை-மனித மோதலைத் தடுக்க வனப்பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றுவதுதான் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.  அதையும் மீறி வனத்தில் இருந்து வெளியேறும் யானைகளைக் கண்காணிக்க யானைகளுக்குப் பாதிப்பு ஏற்படாதபடி தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவழியைத் தேடலாம்.  யானைகளின் நடமாட்டத்தைச் சென்சார் கருவிகள் மூலம் கண்காணித்து வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் குறித்து அந்தந்தப் பகுதியில் உள்ள வனச்சரகரின் செல்போனுக்குக் குறுந்தகவல் அனுப்பும் வகையிலான நவீன கருவியை கோவையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஓராண்டுக்கு முன்பு கண்டுபிடித்தனர். அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் திட்டத்துக்கு வனத்துறைகூட நிதி ஒதுக்கியிருந்தது. அந்தத் திட்டம்கூட சிறந்த மாற்றாக இருக்கக்கூடும்.  இயற்கையோடு வாழுங்கள். முடியாவிடில், இயற்கையைவிட்டு ஒதுங்கி வாழுங்கள். இயற்கையைச் செயற்கையால் அடக்கி வாழலாம் என்றால் இயற்கையின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த இயலாது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?
விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோயற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது.  உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்குச் செல்வது என்பதை விளம்பரங்கள் தீர்மானித்தாலும், அந்தக் கடை பற்றிய தனது ஞானமே முக்கியமான காரணம் என்ற கற்பனையில்தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது.  

1996-ல் ஒரு சமையல் எண்ணெய் நிறுவனம், ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது. எனவே, இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்கவல்லது என்று விளம்பரம் செய்ததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார்.  மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணெய் வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்துகொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம்.  ஆனால், விளம்பரம் குறிப்பிடுவதைப்போல் அந்த எண்ணெய், பயன்பாட்டுக்குப்பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை "ரிலாக்ஸ்' செய்திருக்கலாம், ஆனால் தீர்க்காது. ஏனென்றால், இதய நோய் எண்ணெயுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்பப் பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே விழிப்புணர்வு. 

 விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இணைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின்தங்கி உள்ளது.  நீண்ட போராட்டத்துக்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படைச் சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளன.  2010-ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களைச் சுமத்தி வருகின்றனர்.  குறிப்பாக, இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது சரியா என்பது சீரிய விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.  


அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்துகொள்ளக் கூடியது. பின்னவர்களில், குறிப்பாக பெற்றோர் எதிர்ப்புப் புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்துப் பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவனம் செலுத்துவதுதானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாகத் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  அது மட்டுமல்ல, 2011 பிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படி பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்கான முதலீடு எனக் கருதப்படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.  மகிழ்வுக்குரிய தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்ச நீதிமன்றம் கடந்த 1993 உன்னிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இணைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் தொடக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?  சட்டம் மிகமிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஆட்சியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படி தாமதத்துக்குக் காரணம்.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்துவந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க முடியும் என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி தொடங்கி, ஆச்சார்யா ராமமூர்த்திவரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.  ஆனாலும், 

அதிகபட்சமாக 4 சதம் தான் பட்ஜெட்களின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கியூபா 18.7. மலேசியா 8.1, கென்யா 7, தென் ஆப்பிரிக்கா 5.3, தாய்லாந்து 5.2, எத்தியோப்பியா 4.6, உலக நாடுகளின் சராசரி 4.9, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால், இந்தியா 4 சதம் மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில்தான் தேவை அதிகம். ஆனால், செயல் எதிர்மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவைவிட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.  2009-ல் சட்டம் முன்மொழியப்பட்டபோது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும்போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப்படும், எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி. (காமன்வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி. (கோதாவரி ஆற்றுப்படுகை கேஸ்) என்ற "ஜி' வரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்விபெறும் உரிமையை நிலைநாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்னை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி.ஐ. மொரிஷியஸ் சென்றதாகச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.  1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை என்ற முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் டாக்டர் தர்மேந்திர பண்டாரி.  இக்காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இதுபோன்ற தகவல்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிதி ஆதாரங்களையும் இதர பல முயற்சிகளாலும் அருகமைப் பொதுப் பள்ளிகளை அமைப்பதில் அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும்.  இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அணில் சடகோபால் என்ற கல்வியாளர், அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப்படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்குக் குழந்தைகள் சென்றுவர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார்.  தமிழ்நாட்டில்கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.  சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25 சத ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவனம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின்தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர் அதிகரித்து வருவதைக் காணலாம்.  குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாகத் தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கறை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலைகொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடிதண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப்படவில்லை.  இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலைபேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக, படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.  தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப்பட்டாலே, அரசுப் பள்ளிகள் சிறந்ததாக மாற முடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 19 ஜூலை, 2011







மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்

தாமரை மகளிர் குழு ஊக்குனர் நாராயணி வரவேற்றார்.
குறிஞ்சி மகளிர் குழு நிர்வாகி சாஜி தலைமை வகித்தார். கிரேசி மகளிர் குழு நிர்வாகி இந்திராணி, சினேகா மகளிர் குழு நிர்வாகி மேரி முன்னிலை வகித்தனர். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சூரியா மகளிர் குழு நிர்வாகி ஓமனா நன்றி கூறினார்.
 கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மகளிர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கசநோய் குறித்தும் விளக்கமளித்தார்.

வார்டு உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்
கூட்டத்தில் காசநோய், பொது சுகாதரம், தேர்தலில் பங்கேற்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. மேலும் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை போட்டியிட வைப்பது; குழு வேட்பாளர்களுக்கு அனைத்து மகளிர் குழுவினரும் ஒத்துழைப்பது; நோய்பரவுவதை தடுக்கவும், பொது சுகாதாரத்தை பேணிகாக்கவும் வீட்டிற்கு ஒரு தனி கழிப்பிடம் அமைத்து கொள்ளுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

திங்கள், 18 ஜூலை, 2011






ref="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0WhmrM16UznUtTE-XNQZFiLoKsX6bsPgSlLBb6aus_ImUlkny_RtDa6i_ksT-DnbW7glorzo3dn288_g1Qx9aaADS87IZwKRTnXDigIpuDKvYaixCf6x-kxWsQqbpo2x2zLQWMXjfSCo/s1600/27.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

வெள்ளி, 15 ஜூலை, 2011

நீர் மாசுபடுதல்







நீர் மாசுபடுதல்
மேலோட்டம்
நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொருள்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்பட்டு அதன் தரம் குறைவதே ஆகும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் ஏற்படுவதாகும். நீர் மாசுபாடு என்பது பெருங்கடல்கள், ஏரிகள், நீரோட்டங்கள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் உள்ள இடங்கள் அனைத்திலும் ஏற்படக்கூடிய தூய்மைக்கோடாகும். இதனால் நச்சுப்பொருள்கள் தேவைப்படும் பொருட்கள், எளிதில் கரையக்கூடிய பொருள்கள் கதிர்வீச்சுகள் ஆகியவற்றின் வெளியீடு ஏற்பட்டு நிலத்தின் அடியில் மாற்றம் படிந்துவிடும். இதனால் நீர் நிலைகளின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக வளம்குன்றிய நீர்நிலைகள் (Entrophication) என்று நிலைமை ஏற்படும். அதாவது நீர் நிலையில் மாசுபடுத்திகளினால் அதிகமாக வளர்ந்து பரவுவதால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.
சுற்றுப்புறத்திற்கு மணிச்சத்தினால் (phosphorus) ஏற்படும் தாக்கம்:
அதிகமான மணிச்சத்து கேடு விளைவு
  • வளம் குன்றிய நீர்நிலைகள்
  • பிரணவாயுவின் பற்றாக்குறையினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் நச்சுப்பொருள்கள் உண்டாகும்.
  • குடிநீரை தூய்மைப் படுத்துவதற்கான செலவு அதிகமாகுதல்.
  • அப்பகுதியின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படுதல்
  • வண்டல் படிவங்கள் அதிகரிப்பதால் பொழுதுபோக்கிற்கான நீர் உபயோகித்தல் தடை ஏற்படுதல்
  • நீரின் மேற்புறத்தில் ஏற்படும் படிவங்கள் மற்றும் துர்நாற்றம்
  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
வளம் குன்றிய நீர்நிலைகள்
Eutrophication
வளம் குன்றிய நீர்நிலைகளை குறைக்கும் வழிமுறைகள்
  • நீர் பிழப்பு பகுதிகளின் மேலாண்மை முறைகள்
  • மணிச்சத்து உரங்களை தேவையான அளவு உபயோகித்தல்
  • மணிச்சத்து உரங்களின் வகை
  • அங்கக உரங்கள் உபயோகப்படுத்தல்
  • வடிகால் வசதிகளை மாற்றியமைத்தல்
இரசாயன நேர்த்தி
நீர் சுழற்சி மற்றும் மாசுபாடு
நீர் சுழற்சி என்பது நீர் சுழலும் பாதையாகும். பூமியில் நீரானது மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதுவே பூமி மற்றும் வளிமண்டலத்தின் இடையே ஏற்படும். நீர் சுழற்சி (அ) தொடர் நீர் இயக்கம் என்றழைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளில் இது நடைபெறுகின்றது.
  • ஆவியாதல்: நீரானது திரவத்திலிருந்து வாயுத்தன்மையாக மாறுதல் இலைத்துளை மூலம் ஆவியாகுதல்
  • படிந்துவிடுதல்: ஆவியானது குளிர்ந்த பதத்தில் படிந்துவிடுதல் (குளிரூட்டப்பட்ட அறை)
  • மழை பெய்தல்: பூமிக்கு மீண்டும் வரக்கூடிய நீர் (மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் பெரியதாகி மழையாக பெய்யும்)
நீர் சுழற்சி மற்றும் மாசுபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு
நீர் சுழற்சியின் படி, இயற்கையின் நிகழ்வாக நம்மைச் சுற்றி உள்ள நீரானது நிலத்தினுள் உறிஞ்சப்பட்டு ஆறுகள் மூலம் நீரோடைகளாக சென்று கடலினை அடையும். உயிர்சிதைவு ஏற்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நன்மை அளிக்கும் முறையில் மாற்றப்படும். அதுபோல் கனிம மாசுபடுத்திகள் பரந்து இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பது இல்லை.
சிறிய அளவிளான அங்கக மற்றும் கனிம மாசுபடுத்திகள் நீரோடைகளில் பாதுகாப்பாக சிதைக்கப்பட்ட கடலுள் கலந்து விடுவதால் சூழிலடத்திற்கு ஏதும் தீங்கு இல்லை. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் இருந்தால் கடலோர உயிரினங்களை பாதிக்கும்.
வழிகள் மற்றும் முறைகள்
நீர் மாசுபாடு ஏற்படுத்தும் முக்கிய வழிகள் பின் வருவனவாகும்.
  • பெட்ரோலிய பொருட்கள்
  • செயற்கை வேளாண் இரசாயனங்கள்
  • கடின உலோகங்கள்
  • தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள்
  • அளவிற்கு அதிக அங்கக பொருட்கள்
  • படிமானங்கள்
  • தொற்று ஏற்படுத்தும் கிருமிகள்
  • காற்று மாசுபடுதல்
  • வெப்ப மாசுபாடு
  • மண் மாசுபாடு
நீர் மாசுபாடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு
மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள்,
  • டைபாய்டு
  • அமிபியாசிஸ்
  • ஜியார்டியாசிஸ்
  • அஸ்காரியாசிஸ்
  • கொக்கி புழுக்கள்
மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள்
  • தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல்
  • மூச்சு திணறல் நோய்கள்
  • மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், வாந்தி மற்றும் வயிற்றுவலி
வாந்தி மற்றும் வயிற்றுவலி
இரசாயனங்கள் (பூச்சிக்கொல்லிகள், ஹைட்ரோகார்பன், அங்கக மாசுபடுத்திகள், கடின உலோகங்கள்) போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள்.
Water Production
  • புற்று நோய் - இரத்தப் புற்று நோய்
  • இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிப்பாதைகளை தடுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்
  • நரம்பு மண்டலங்களுக்கு சேதம்
  • சிறுநீரகம் மற்றும் கல்லுரலுக்கு சேதம்
  • டிஎன்ஏ விற்கு சேதம்
பாதரசத்தினால் ஏற்படும் பாதிப்பு
  • கர்ப்பத்தினுள்: நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, குறைந்மத பதிவுகள், கற்பதற்காக ஏற்படும் கோளாறுகள், காது கேளாண்மை மற்றும் மூளை பாதிப்பு
  • பெரியவர்களுள்: நியாபக மறதி, உறுப்பின் காழ்ப்பு, பக்கவாத நோய்கள், இதய நோய்கள் மற்றும் மரணம்.
பிற தகவல்கள்:
நீர் மற்றும் மாசுபட்ட மண்ணும் சேர்ந்தால் நீர் மாசுப்பாடு ஏற்படும் (அ) காற்று தொற்றுகள் (உதாரமாண அமில மழை) போன்றதும் நீரினை மாசுபடுத்தும்.
மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும். (உதாரணமாக மீனில் உள்ள அதிக பாதரச அளவு)
மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.
நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
  • உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து அதனை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும். மேலும் மீன்களில் நோய்களை பரப்புகின்றது.
Water Pollution
எண்ணெய் பூசப்பட்ட வாத்து
  • இரசாயன மாசுபாடினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரான பாதிப்புகள் ஏற்படும். அவற்றின் இனப்பெருக்கம், வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும்
  • நீரில் உள்ள பாதரசம் நேர் எதிரான அசாதாரண குணங்கள் குன்றிய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் மரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்
  • அழியாத அங்கக மாசுபடுத்திகள் மீன் இனங்களுக்கு மரணம் மற்றும் குறைபாடுகளை எற்படுத்தும்
  • நீரில் உள்ள அதிக உப்பு உயிரினங்களை அழித்து விடும்.
நீர் மாசுபாட்டினால் மரம் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு:
நீரில் வளரும் செடிகளை ஒளித்தொகுப்பினை பாதித்து அதனால் அவற்றின் சூழ்பத்தினையும் பாதிக்கும்.
நீரில் உள்ள மாசுபடுத்திகளை உட்கொள்ளும் செடிகள் அவற்றை உணவுச் சங்கில் மூலம் உண்ணும். மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பரவச்செய்கிறது.
நீரில் உள்ள அதிகப்படியான உப்பு (சோடியம் க்ளோரைடு) செடிகளை அழித்துவிடும்.
கட்டுமானங்களில் இருந்து விழும் மரக்கட்டைகள் களிமண் மற்றும் மணல் போன்றவை சரிவதாலும் செடிகள் அழிந்து விடும்.
நீரில் உள்ள களைக்கொல்லிகள் செடிகளை அழித்துவிடும்.
நீர் மாசுபாடு மேலாண்மை:
உயிர்வழி நிவர்த்தி:
நுண்ணுயிர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி நிலைப்பட்ட வலயினுள் உள்ள அங்கக பாகங்களின் உணிர்சதைவை துரிதமாக்குதல்.
முழுமையடைந்த பெட்ரோலியம் ஹெட்ரோகார்பன் பொருள்களுக்கு (எம்.டி.பி.இ தவிர்த்து நீள் சங்கிலி அதிக மூலக்கூறு எடை மற்றும் கரையாத பொருள்களால் ஆன அனைத்தும்) பொருந்தும்.
பிற நிலைப்பட்ட வலய நிவர்த்தி தொழில் நுட்பங்கள் (எ-டு. மண் நீராவி பிரித்தெடுத்தல், உயிர்காற்றோட்டம்)
வரையறை முறைகள்: மின்னணு ஏற்பான் (ஆக்ஸிஜன், நைட்ரேட்), ஊட்டச்சத்தி (நைட்ரஜன், பாஸ்பரஸ்), ஆற்றல் மூலம் (கார்பன்).
நிவர்த்தி முறைகள்: காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்று மாறுபட்ட (நைட்ரேட் சுவாசம்), காற்றில்லாத (பிராணவாயு அல்லாத சுவாசம்), ஒன்றுபட்ட வளர்சிதை மாற்றம்.
இரு நிலை பிரித்தெடுத்தல்:
  • நிலத்தை நீரினை மாசுபடுத்தும் அனைத்து பொருள்கள் பெட்ரோலிய பொருள்களின் தனிப்பட்ட நிலை, நிலத்தடியிலிருந்து ஆவியாகும் ஹைட்டேரா கார்பன் ஆகியவற்றை வெளியேற்றுதல்
  • அதிகமான வெளியேற்றம் ஆற்றல் கொண்டதால், பெட்ரோலிய பொருட்களின் உயிர்சிதைவினை அதிகப்படுத்துவதுடன் நிலத்தடியிலுள்ள பல்வேறு நிலை கொண்ட பொருட்களையும் அகற்றிவிடும்
  • வரையறை முறைகள்: காற்றற்ற , நீரளவையியல் மற்றும் நீர்
  • நேர்த்தி முறைகள்:
  • ஒரு குழாயினை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை அதிவிரைவு இரு நிலைஓட்டமாக வெளியேற்றுதல்
  • இரு (அ) அதிகமான குழாய்களை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை வெளியேற்றுதல்
இயற்கையாக அளவினை குறைத்தல்:
  • இயங்கா நேர்த்தி முறையான இது இயற்கையான முறைகளை கொண்டு பங்குகளை சிதைத்தல் மற்றும் பரவவிடுதல் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்
  • பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்தி குறைப்பதுடன் விரைவில் தாக்குதல் ஏற்படும் பொருட்களுக்கு அது பரவாமல் தடுக்கும்.
  • இயக்க நேர்த்தி முறைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவினை குறைக்கும் இடங்களுக்கு பொருந்தும்.
முறைகள்:
  • அழித்தல் (உயிரியல் முறைகள்): காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்றற்ற (பிராணவாயு அற்ற சுவாசம்), மற்றும் குறைந்த காற்றுள்ள (குறைந்த பிராணவாயு அளவு)
  • அழித்தல் அல்லாத மறைகள் (இயற்பியல் முறைகள்): ஆவியாக்குதல், பரப்புதல் (இயந்திர முறை கலப்பு மற்றும் மூலக்கூறு பிரித்தல்) மற்றும் உறிஞ்சுதல்
உயிரியல் முறைகள்:
இயற்கையான உயிர்சிதை முறைகள் ஏற்படும் வேகத்தினை இரசாயனங்கள் (அ) உயிரினங்களை கொண்டு அதிகப்படுத்துதல்
சிந்திய எண்ணெய்களை கடலோரங்கள் மற்றும் நன்செய் நிலங்களில் உள்ள சூழிலடம் பாதிக்காமல் அகற்றுதல்.
வரைமுறை முறைகள்:
காற்றுள்ள (அ) காற்றல்லாத நுண்ணுயிர்கள் மூலம் மக்குதல் (எ-டு. பாக்டீரியா)
நேர்த்தி முறைகள்:
  • உரமிடுதல்: உயிர்சிதைவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மாசுபட்ட சுற்றுப்புறத்தில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களை சேர்க்க வேண்டும்
  • விதையிடுதல்: நுண்ணுயிர்களை இருக்கும் இளங்கை மண்ணில் சேர்த்தல்
பரவச் செய்யும் பொருள்:
  • புறஈர்ப்பான்களை கொண்ட இரசாயனங்கள் எண்ணெயினை சிறு துகள்களாக உடைத்து நீரினுள் கலந்து பின்னர் காற்று அலைகள் மற்றும் ஓட்டங்கள் போன்ற இயற்கை செயல்களினால் மேலும் உடைந்துவிடுதல்
  • கடலில் உள்ள நீரின் உப்பு அளவு, வெப்பநிலை மற்றும் உள்ள நிலைகள் பரவும் திறனை நிர்ணயிக்கும்
  • இயந்திரங்கள் மூலம் அல்லது தூய்மைபடுத்துதல் கடினமாகும் பொழுது கடலின் நிலை கரடுமுரடாக அமைந்திருந்தால் இம்முறையை பின்பற்ற வேண்டும்.
ஈர்ப்பான்கள்:
  • நீரினை முழுக்கிவிடும் அதாவது எண்ணெய் விரும்பும் மற்றும் நீர் விரும்பாத பொருள்கள்
  • எண்ணெய் சிந்தியுள்ள நிலைகளில் உபயோகிக்கலாம். இது பின்வரும் காரணிகளை நிர்ணயம் செய்யும்
  • ஈர்பான்கள் வகை மற்றும் எண்ணெயின் வகையை கொண்டு உறிஞ்சும் திறன் வேறுபடும்
  • நீர் வழிந்தோடும் தன்மையை பொறுத்து எண்ணெய் தக்க வைத்துக் கொள்ளுதல் அமையும்.
  • சுலபமாக உபயோகிக்கும் முறை ஈர்ப்பான்களின் வகை மற்றும் மண்ணின் வகையை கொண்டு அமையும்.
  • ஈர்க்கும் பொருள்
  • இயற்கை அங்கக பொருள்: மிதப்பான்களில் இணைக்கப்பட்ட மரத்தூள்கள் தங்களது எடையில் 3 முதல் 15 முறை வரையில் எண்ணெயினை முழ்கடிக்கும்.
  • இயற்கை கனிம: களிமண், பெர்லைட், வெர்மிகுலைட், கண்ணாடி நூல், மணல் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவை தங்களது எடையில் 4 முதல் 20 முறை, எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும்.
  • செயற்கை: பாலியுரேத்தேன், பாலித்தீன், நைலான் இழைகள் தங்களது எடையில் 70 முறை எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும். இவற்றில் சிலவற்றை தூய்மைபடுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மற்றவை ஒரு முறை உபயோகித்த பின் அழித்து விட வேண்டும்.
  • பொதுமக்களின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பக்குவத்தின் அடிப்படையில் தொழிற்சாலையின் தொடர்ச்சியான மேம்பாட்டினை அப்பகுதியை பொருத்து சரிவிகிதமாக்குதல்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

செவ்வாய், 12 ஜூலை, 2011

pothai vilippunarvu nigalchi




vilippunarvu
nigalchi
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

ஆப்பிள் சாப்பிட போறீங்களா ? (கவனமாக இருக்கவும்)



ஆப்பிள் சாப்பிட போறீங்களா ? (கவனமாக இருக்கவும்)

நீங்கள் பேருந்து நிலைய வழியாகச் செல்லும்போது அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் கூடைகூடையாக ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இறங்கும். பழங்களெல்லாம் பாதுகாப்பாய் வைக்கோலால் பொதியப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். மொத்த விற்பனையாளர் அந்தப் பழங்களை இறக்கி, சில்லறை விற்பனையாளர்களுக்கு வினியோகித்துக் கொண்டிருப்பார்.


முன்பு நாம் பார்த்த பழங்கள் மெருகு குலையாதவை. இன்றைய பழங்கள் மெழுகு குலையாதவை. அறிவியலும் தொழில்நுட்பமும் நன்மையோடு தீமையையும் செய்து கொண்டிருக்கின்றன.

இன்று பழம் விளைகிற ஊரில் பழத்தை வாங்க முடியாத அளவுக்கு விலை. விளைகிற ஊரிலிருந்து பழங்கள் வாகனங்கள், ரயில், விமானமென ஆயிரக்கணக்கான மைல் தூரங்களைக் கடந்து உலகின் எந்த மூலைக்கோ பயணப்படுகிறது.

வழக்கமாக அமெரிக்கா, தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு, டிராகன், கிவி போன்ற பழங்கள் இங்கே இறக்குமதி செய்யப்படுகின்றன.

அந்தப் பழம் கெட்டுப் போகாமல் அது பயணப்படும் காலத்தையும் கால நிலையையும் தாங்கிக் கொள்ளும் விதமாக அது பதப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பார்க்கப் பளபளப்பாக இருக்கும் விலை உயர்ந்த ஆப்பிள் பழங்கள் ரசாயன மெழுகால் பூசப்பட்டு பொதியப்பட்டவை. கையால் அப்பழத்தைச் சுரண்டிப் பார்த்தாலே அந்தப் பழத்திலிருந்து மெழுகு உதிர்வதைக் காணலாம். பெரும்பாலானவர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களின் பளபளப்பில் அதுவே தரமான ஆப்பிளாகக் கருதி அதிக விலை கொடுத்து வாங்கிவிடுகின்றனர். அந்த ஆப்பிள் பழத்தில் பூசப்பட்டிருக்கும் மெழுகு இயற்கைத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட உண்ணத் தகுந்தவையா, ரசாயனப் பூச்சா என யாராலும் பகுத்தறிய இயல்வதில்லை.


ரசாயனப் பூச்சு மெழுகும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்த முறையான ஆய்வும் இல்லை. மக்களுக்கும் அது குறித்த போதுமான விழிப்புணர்வும் இல்லை.

பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.

இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் தூரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.

மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள்.

நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர்.

சுத்தப்படுத்தப்பட்ட மெழுகானது சுவையற்றது, மணமற்றது, விஷமற்றது. ஆனால், இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கே உரிய மெழுகைத்தான் இந்த வணிக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றனவா என்றால் பெரும்பாலும் இல்லை.

பழங்களுக்கு மெழுகு பூச்சிடுவதால் வணிகர்களுக்குச் சாதகமான அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மெழுகிடுவதால் பழங்களின் எடைக்குறைவைத் தவிர்க்க இயலும்.

பளபளப்பான தோற்றம், பழத்தின் இளமையைக் கூட்டுதல், பழத்தின் நீர்மம் ஆவியாகாமலும் பழம் சுருங்கிவிடாமலும் தடுத்தல், பழத்தின் பருமனைப் பெருக்கிக் காட்டுதல், பூச்சிகளிலிருந்தும் மற்ற காரணங்களாலும் பழம் பழுதடையாமல் காத்தல் என பல அம்சங்கள் அவர்களை இந்த மெழுகிடும் வேலையைச் செய்விக்கின்றன.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்காத பூச்சிடத்தகுந்த சாதனங்கள் விலை அதிகமானவை. அதனால் தரங்குறைந்த மெழுகுகளால் மெழுகப்பட்ட பழங்கள் பல பெரிய நிறுவனங்களின் அலமாரிகளை பளபளப்புடன் அலங்கரிக்கின்றன. அந்தப் பழங்களுக்கு மெழுகோடு ஆஸ்திரேலிய, அமெரிக்கப் பெயர்களும் பெருமையுடன் சூட்டப்படுகின்றன.

மெழுகிடப்பட்ட இந்தப் பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு தொடர்புடைய நோய்களுக்கு வழிவகுப்பதோடு, புற்று நோய்க்குக்கூடக் காரணமாகிவிடும் என்ற மக்களின் அச்சத்துக்கு வலுவான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இன்னொரு பக்கம் கார்பைடு கற்களால் செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைத்து விற்கப்படுகின்றன. பணமே முக்கியமாகிவிட்டது. நாட்டின் ஆரோக்கியத்தைப் பற்றி எவருக்கும் அக்கறை இல்லை.

அந்தந்த ஊரில் விளையும் கொய்யா, மாங்காய், பப்பாளி, வாழை, திராட்சை போன்றவற்றிலேயே நமது ஆரோக்கியத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் உள்ளன. அதைப் பறித்த குறைந்த கால அளவுக்குள் அந்தந்த ஊர் மக்களும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் உட்கொள்ளலாம்.

பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமிலவாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம்.

சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தைவிட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும் சீர்கெட்டு வருகிறதாம்.

ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம்.

இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.

இந்நிலையில் நாகரிக உலகத்தைப் பார்த்து ஆப்பிளும் மெழுகைப்பூசி தன் அழகை மெருகேற்றிக் கொண்டதோ?

pothai




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்