Tuesday, March 23, 2010
தியாகிகள் பகத்சிங். சுகதேவ். ராஜகுருவிற்கு வீரவணக்கம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து தீவிரமாக போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பகத்சிங். 1907 ஆம் ஆண்டு பிறந்த பகத்சிங், தனது பள்ளி, கல்லூரி நாட்களிலேயே சுதந்திர வேட்கையுடன் செயல்பட்டார்.
இந்திய விடுதலைக்காக தனது இளமையை அர்ப்பணித்து உயிர்த் தியாகம் செய்த அந்த மாவீரர்களின் நினைவுநாள் இன்று.
அந்த வீரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் வகித்த பங்கை இங்கு அளித்துள்ளோம்.
விடுதலைப் புரட்சியாளர்கள் பகத்சிங், ராகுரு, சுகதேவ் (1919 - 1937)
1919 ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.
நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையரை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் விரட்ட வேண்டும் என்று உறுதியுடன் முடிவெடுத்த இந்த இளைஞர்கள், 1924 ஆம் ஆண்டு சச்சின்தரா நாத் சன்யால் என்ற தேச பற்றாளர் துவக்கிய இந்துஸ்தான் விடுதலை அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த ராம்விகார் ராம் பிரசாத் மிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பஹூல்லா கான், மன்மந்த்நாத் குப்தா, சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி காக்வோரி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை நிறுத்தி அரசு கஜானாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தைக் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் வெள்ளைய அரசிற்கு பெரும் தலைக் குனிவையும், சவாலையும் ஏற்படுத்தியது.
இதில் ஈடுபட்டவர்களில் சந்திரசேகர ஆசாத் தவிர, மற்ற அனைவரும் பிடிபட்டனர். இதனால் அந்த இயக்கம் முடங்கிவிட்ட நிலையில், நவ ஜவான் பாரத் சபா என்ற அமைப்பை பகத்சிங், பகவதி சரண் வோரா, சுகதேவ், யாஷ்பால் ஆகியோர் 1926ல் லாகூரில் துவக்கினர். மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டும் பொதுக் கூட்டங்களை இவ்வமைப்பு நடத்தியது.
இதற்காக ராஜ துரோக குற்றம் சாற்றப்பட்ட ராம்பிரசாத் பிஸ்மில், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பகுல்லா கான் ஆகியோர் 1927ல் தூக்கிலிடப்பட்டனர்.
சாண்டர்ஸை சுட்டுக் கொன்ற பகத் சிங் (1928)
1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போது அதில் பகத்சிங்கின் நவ ஜவான் பாரத் அமைப்பும் ஈடுபட்டது. அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று சைமன் கமிஷனைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாப சிங்கம் லாலா லஜபதிராய் கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 ஆம் தேதி மரணமடைந்தார். இச்சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவக்கியது.
லாலா லஜபதிராய் மீது தடியடி நடத்திய வெள்ளைய காவல் அதிகாரியான சாண்டர்ஸ், காவல் கண்காணிப்பாளரான ஸ்காட் ஆகியோர் மீது பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் குறிவைத்தனர். லஜபதிராய் இறந்து சரியாக ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 17 ஆம் தேதியன்று பகத்சிங்கும், ராஜகுருவும் சாண்டர்ஸை சுட்டுக் கொன்றனர்.
சாண்டர்ஸை ஏன் கொன்றோம் என்பதனை விளக்கி லாகூர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. பகத்சிங்கும், ராஜகுருவும் தலைமறைவாயினர்.
லாகூர் சதி வழக்கு!
இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களும் வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்க தொழில் தகராறு சட்ட வரைவு ஆங்கில அரசு கொண்டு வந்தது.
இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில் டெல்லி மத்திய சபையில் குண்டு வீசுவது என்று பகத்சிங் கூறிய திட்டம் ஏற்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர். செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம் என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.
பகத்சிங்கும், தத்தும், ராஜகுருவும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
1931 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.
உயிர் துறந்த அவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சட்லஜ் நதிக்கரையில் எரித்தனர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் மூட்டிய விடுதலைத் தீ நாடு முழுவதும் பற்றி எரிந்தது.
தங்களது இன்னுயிரை ஈந்து அவர்கள் மூட்டிய விடுதலைத் தீ நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சுதந்திர இயக்கத்திற்கு இன்னுயிரை ஈந்து உந்து சக்தியாகத் திகழ்ந்த அம்மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக